• Apr 17 2024

நான்கு பெண்களுடன்... சைக்கோ கொலையாளியாய் மாறும் நடிகர் வினய்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான 'உன்னாலே உன்னாலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். இவர் தன்னுடைய  அறிமுகப் படத்திலேயே சாக்லேட் பாய் தோற்றத்திற்காக ஏராளமான பெண் ரசிகர்களைப் பெற்றார். 

அதனைத் தொடர்ந்து 'ஜெயம் கொண்டான்', 'என்றென்றும் புன்னகை' உட்பட ஒரு சில குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து வந்தார்.


அதுமட்டுமல்லாது வில்லன் கதாபாத்திரத்திலும் அசத்தலான நடிப்பினை வெளிப்படுத்தக் கூடிய திறமை இவருக்கு  உண்டு. அதாவது 2017 இல் நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா நடித்த 'துப்பறிவாளன்' படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக மாற்றி இருந்தார் இயக்குநர் மிஷ்கின். 

அந்த கதாபாத்திரத்தின் வாயிலான இவரின் மிரட்டலான நடிப்பின் வெற்றி ஆனது அவரை சிவகார்த்திகேயனுடன் 'டாக்டர்' மற்றும் சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களிலும் வில்லனாக நடிக்கத் தூண்டியது.

அத்தோடு சூர்யாவின் தயாரிப்பில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'ஓ மை டாக்' திரைப்படத்திலும் நடித்துள்ளார் வினய்.


இவ்வாறாக ஹீரோ, வில்லன் என வேறுபட்ட வேடங்களில் நடித்து வருகின்ற வினய் நடிப்பில் தற்போது 'மர்டர் லைவ்' என்ற திரைப்படம் ஆனது வரவிருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. இப்படத்தில் நடிகர் வினய்யின் தோற்றம் ஆனது பார்வையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும் 'மர்டர் லைவ்' ஒரு சைக்கோ மற்றும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஆகும். அதில் வினய் கதாநாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாது கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை ஷர்மிளா மாண்ட்ரே கதாநாயகியாக நடிக்கின்றார். 

அத்தோடு ​​ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் மிசாலே ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் டி ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார். மதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநரான முருகேஷ் படம் பற்றிக் கூறும்போது, ​​"நிகோ மாஸ்டோராகிஸ் இயக்கிய 'டாட் காம் ஃபார் மர்டர்' என்ற ஆங்கிலப் படத்தின் மூலம் 'மர்டர் லைவ்' எடுக்கப்பட்டது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம் என்றாலும், திரைக்கதை நகைச்சுவையாகவும் புதுமையாகவும் இருக்கிறது. 


இப்படத்தின் கதையானது நான்கு பெண்கள் மற்றும் ஒரு சைக்கோ கொலையாளியின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகின்றது. கதையின் ஹீரோ மிகவும் புத்திசாலி, இணையத்தைப் பயன்படுத்தி அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அரங்கேற்றக் கூடிய ஒருவர்" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் முருகேஷ் மேலும் கூறுகையில் "படத்தை முழுவதுமாக இங்கிலாந்தில் படமாக்கினோம். ஆக்‌ஷன் காட்சிகளும், எளிதில் யூகிக்க முடியாத சுவாரசியமான கதைக்களமும் படத்தின் சிறப்பம்சமாக இருக்கும். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம், விரைவில் முதல் சிங்கிள் மற்றும் டீசரை வெளியிட உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

 இதனைத் தொடர்ந்து வினய் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பத் தொடங்கியிருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement